articles

img

அந்தி மண்டலத்தில் இருந்து ஒரு அச்சமூட்டும் செய்தி - சிதம்பரம் இரவிச்சந்திரன்

      பூமியில் இயற்கை படைத்த அற்புத அமைப்புகளில் ஒன்று கடல். மனிதன் இன்னும் அதிகம் அறியாத இப்பெரும் நீர்ப்பரப்பில் குறைந்த அளவு மட்டுமே ஒளி ஊடுருவிச்செல்லும் அந்தி மண்டலம் பகுதி (twilight zone) உள்ளது. இது கடல் மேற்பரப்பில் இருந்து 200 முதல் 1000 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. இங்கு உயிரினங்கள் வாழ்கின்றன. ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது.

     உலகின் அட்லாண்டிக், பசுபிக் மற்றும் இந்தியப்பெருங்கடல்களில் பரவியிருக்கும் இப்பகுதியில் காணப்படும் உயிரினங்கள் இங்கு வாழ்வதற்கென்றே சிறப்புத் தகவமைப்பைப் பெற்றுள்ளன. இவை பெரிய கண்கள் மற்றும் ஒளி உமிழ் தோலுடன் காணப்படுகின்றன. விளக்கு சுறா (lantern shark), கைட் ஃபின் சுறா (kite fin shark) போன்ற பல அரிய உயிரினங்கள் மற்றும் விலங்குகள் இவற்றில் சில. இப்பகுதி புவி வெப்ப உயர்வினால் சூடாகும் கடலில் இருந்து அழியும் ஆபத்து உள்ளது என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

   மிகக்குறைந்த சூரிய ஒளி விழும் இப்பகுதியில் கடலின் தரைப்பரப்பில் இருந்து கீழ்நோக்கி விழும் உணவின் அளவு குறைந்துகொண்டேவருகிறது. உயரும் கடல் வெப்பம் இங்கு வரும் மக்கி உருவாகக்கூடிய அங்ககப்பொருட்களின் (wood stem) அளவைக் குறைக்கிறது. அந்தி மண்டலக் கடற்பகுதியில் வாழும் விலங்குகள் மேற்பரப்பில் இருந்து மூழ்கி கீழ்நோக்கி வரும் இறந்த மிதவை உயிரினங்கள் (phytoplankton), மீன் கழிவுகள் போன்ற பில்லியன் டன் கணக்கிலான அங்ககப்பொருட்களை உணவாக எடுத்துக்கொள்கின்றன.

     இப்பொருட்கள் கடற்பனி (marine snow) என்று அழைக்கப்படுகிறது. சூடான கடல் நீர் இவ்வாறு மூழ்கும் உணவின் தரத்தை பாதிக்கிறது. இதனால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இப்பகுதியில் வாழும் உயிரினங்களில் 40% அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

    இயற்கை (Nature) என்ற புகழ்பெற்ற சூழல் பற்றிய இதழில் இது குறித்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அழிவை மனிதன் சரிசெய்ய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.

    கடல் நீர் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன் குளிர்ந்து பரிணாம மாற்றம் அடைந்து குளிர்சாதனப்பெட்டியைப் போல மாறியது. இப்பகுதிக்கு வந்து விழும் உணவை இப்பகுதி நீண்டகாலம் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைத்துள்ளது. வளம் மிக்க இப்பகுதி பல்வேறு அரிய உயிரினங்களின் வாழிடமாக உள்ளது என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் எக்ஸிடர் (Exeter) பல்கலைக்கழக முதுநிலை முனைவர் பட்ட மாணவருமான கேத்தரின் க்ரைட்டன் (Katherine Crichton) கூறுகிறார்.

    15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆழ்கடலின் இந்தப் பகுதி இப்போதுள்ளதைப் போல செழுமை மிகுந்ததாக இல்லை என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் இப்போது மனிதக் குறுக்கீடுகளால் இப்பகுதி முழுமையாக அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய இழப்பு என்று க்ரைட்டன் புகழ்பெற்ற கார்டியன் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

   பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பகுதி வரும் 150 ஆண்டுகளில் மறைந்து போய்விடும் அல்லது முற்றிலும் அழிந்து போய்விடும். வெப்பம் மிகுந்த கடல்கள் கார்பன் சேமிப்பையும் குறைத்துவிடும் என்று ஆய்வுக்கட்டுரையின் தலைமை மேற்பார்வையாளரும் கார்டிஃப் (Cardiff) பல்கலைக்கழக விஞ்ஞானியுமான பால் பியர்சன் (Paul Pearson) கூறுகிறார்.

    கடற்பனியில் ஒரு பகுதியான ஆழ்கடலின் அந்திமண்டலம் பகுதியில் மூழ்கும் கார்பன் வெப்பம் மிகுந்த மேற்பரப்பிற்கு அருகில் இருக்கும் நுண்ணுயிரிகளாலேயே உண்ணப்பட்டுவிடுகிறது. இதனால் கார்பன் கடலின் ஆழ்பகுதிக்கு செல்லமுடியாமல் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக கடற்பரப்பிலேயே அதிகம் சேரும் கார்பன் வேகமாக ஆவியாகி வெளியேறுகிறது. இது உயரும் கடலின் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கிறது.

     அந்தி மண்டலத்தின் அழியும் நிலை இன்னமும் மனிதகுலத்தினால் மீட்டெடுக்க முடியாத அளவிற்கு செல்லவில்லை என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. இழப்பு ஏற்படுவதை நம்மால் முழுமையாகத் தடுக்கமுடியாது என்றாலும் உமிழ்வின் அளவைக் குறைத்தால் நிலைமையை நம் கட்டுக்குள் வைத்திருக்கமுடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடலின் இந்தப் பகுதி அதிகம் ஆராயப்படவில்லை என்றாலும் இப்பகுதியிலேயே உலகின் செழுமை மிக்க மீன்வளம் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

   சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஐநா ஆய்வின்படி கடலில் மூழ்கும் அங்ககப்பொருட்களில் 80 சதவிகிதத்தையும் இப்பகுதியே மறுசுழற்சி செய்கிறது. மனிதன் இன்றும் அந்தி மண்டலம் பகுதியைப் பற்றி மிகக் குறைவாகவே ஆராய்ந்துள்ளான். என்றாலும் கடந்த கால ஆதாரங்கள் மூலம் வருங்காலத்தில் இங்கு நிகழப்போவதைப் பற்றி அறியமுடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இப்பகுதியில் மனிதச்செயல்களால் ஏற்கனவே மாற்றங்கள் தொடங்கிவிட்டன என்று கருதப்படுகிறது.

    வருங்காலத்தில் இப்பகுதிக்கு சம்பவிக்கக்கூடிய நிலை குறித்து ஆய்வாளர்கள் மூன்று பிரிவுகளில் கருத்து வெளியிட்டுள்ளனர். 2010 முதல் உமிழப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு 625 பில்லியன் டன்னாக இருந்தால் ஆபத்து குறைவான நிலை (low sinario). 2500 பில்லியன் டன் உமிழ்வு நிகழ்ந்தால் அது நடுத்தர ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. 5000 பில்லியன் டன் உமிழ்வு ஏற்பட்டால் அது மோசமான நிலையைக் குறிக்கிறது. நடுத்தர மற்றும் மோசமான நிலை இரண்டுமே மனிதகுலத்திற்கு ஆபத்தானது.

   2022ல் உலகளவில் கார்பன் டை ஆக்சைடின் உமிழ்வு 40.6 பில்லியன் டன் என்ற மிதமிஞ்சிய நிலையை அடைந்தது என்று எக்ஸிடர் பல்கலைக்கழகம் நடத்திய உலகளாவிய கார்பன் பட்ஜெட் அறிக்கை கூறுகிறது. 2010 முதல் 2022 வரை உலகளாவிய உமிழ்வு ஒவ்வொரு ஆண்டும் 40 பில்லியன் டன் என்ற நிலைக்கு சமீபத்திலேயே உள்ளது. இதனால் குறைவான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையை உலகக் கடல்கள் தாண்டிவிட்டன என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

   மனிதன் அழிவின் பாதையில் சென்றுகொண்டிருப்பதையே அழகு நிறைந்த அதிசயங்கள் புதைந்துகிடக்கும் கடலின் அந்தி மண்டலம் அழியப்போகிறது என்ற இந்த அதிர்ச்சி செய்தி நமக்கு உணர்த்துகிறது.